ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு அதியுச்ச அதிகாரம்! – கூறுகின்றார் அஜித் பெரேரா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“சமஷ்டிதான் தேவை என்று தமிழர்கள் பிடிவாதமாக இருக்கத் தேவையில்லை. அவர்கள் முழுமையாகத் திருப்தியடையும் வகையில் ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரம் வழங்கப்படும் என்று பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தேசிய பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை வழங்கும் நோக்கிலேயே புதிய அரசமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. மக்கள் இணங்க முடியாத எதுவும் அதில் இருக்காது. நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அதை நிறைவேற்றிவிட்டு அதற்கான பொது வாக்கெடுப்பை நடத்துவோம்.

எதையும் பலாத்காரமாகச் செய்யமாட்டோம். 19 தடவைகள் திருத்தப்பட்ட தற்போதைய அரசமைப்புடன் பயணிப்பதற்கு இந்த நாட்டு மக்கள் விரும்பாததால் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவது கட்டாயமாகும். புதிய அரசமைப்பு என்பது எமது தேவையை நிறைவேற்றுவதற்காகக் கொண்டுவரப்படவில்லை. இந்த நாட்டு மக்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே கொண்டு வரப்படுகின்றது. மக்களின் கோரிக்கையே அது.
ஒற்றையாட்சிதான் இறுதித் தீர்வு. அதற்குள் உச்ச அதிகாரம் வழங்கப்படும். தமிழர்கள் பூரண திருப்தியடையும் வகையில் அது அமைந்திருக்கும்.பௌத்த சமயத்துக்கான முதலிடம் அந்தத் தீர்வுக்குள் பாதுகாக்கப்படும்.தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

மக்களின் பூரண இணக்கத்தைப் பெற முடியாதவாறு பொது வாக்கெடுப்பில் வெற்றிபெற முடியாதவாறு அந்த அரசியல் தீர்வு அமையாது. நாட்டைப் பிரித்துக் கொடுப்பதற்கான எந்தவோர் ஏற்பாடும் அதில் இருக்காது” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *