அரச வைத்தியர்கள் வெள்ளியன்று மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பு! – 60 தொழிற்சங்கங்கள் ஆதரவு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி (சைட்டம்) விவகாரம் தொடர்பில் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக அரச வைத்தியர்கள் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர் என்று இலங்கை அரச வைத்தியர்கள் சங்கத்தின் மத்திய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டாக்டர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம், கால்நடை வைத்தியர்கள் சங்கம், அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம், இணை சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கம், வங்கி ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம், உள்நாட்டு இறைவரி உத்தியோகத்தர்கள் சங்கம், மக்கள் விடுதலை முன்னணி, இடதுசாரிக் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் களமிறங்கவுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

நாளைமறுதினம் காலை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமாகவுள்ள பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கவாதிகள், வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புகள் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும், அன்றைய தினம் சகல அரச வைத்தியர்களும் தனியார் மருத்துவ சிகிச்சைகளையும் புறக்கணிக்கவுள்ளன எனவும் டாக்டர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அவசர தேவைகளுக்கும் ஆபத்தான நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்க தாங்கள் ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *