மீதொட்டமுல்லயில் தொடர்கிறது மீட்புப் பணி! – 31 சடலங்கள் இதுவரை மீட்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. அத்துடன், அனர்த்ததால் ஏற்பட்ட சொத்து இழப்பீடு குறித்த மதிப்பீட்டு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது. கள ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன.

கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை மொத்தமாக 31 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 10 பேர் காணாமல்போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 30 பேர் காணாமல்போயுள்ளனர் என முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்த குறித்த நிலையில் அத்தொகை 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்தால் 246 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 76 குடும்பங்களைச் சேர்ந்த 284 பேர் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குப்பைமேடு சரிந்து விழுந்துள்ளதால் குறித்தப் பகுதிகளில் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனினும், இதைக் கட்டுப்படுவதற்குதற்குரிய நடவடிக்கையில் சுகாதார அதிகாரிகள் இறங்கியுள்ளனர். அத்துடன், டெங்குநோய் ஏற்படுவதைத் தடுப்பதற்காக நுளம்பு ஒழிப்புப் புகையும் குறித்த பகுதிகளில் விசிறப்பட்டு வருகின்றது.

அதேவேளை, கொழும்பு நகரில் சேரும் குப்பைகளை பிலியந்தலை, கரதியான கழிவுக் கூடங்களில் தற்காலிகமாகக் கொட்டுவதற்கு கொழும்பு மாநகர சபைக்கு கஸ்பெவ நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, கொழும்பில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை குறித்த பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்களை வழங்குவதற்கு கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கூடாரங்கள் ,தலையணைகள், துப்புரவாக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *