புத்தளத்தில் சிறுவன் படுகொலை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
புத்தளம்,  முந்தல், சமீரகம பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்து சிறுவனொருவன் படுகொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
சமீரகம பிரதேசத்தைச் சேர்ந்த நஸார் முஹம்மது நஸ்ரான்  (வயது  14) எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
உயிரிழந்த சிறுவன்  தனது நண்பரான இளைஞர் ஒருவருடன் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சமீரகம பிரதேசத்திலுள்ள தோட்டத்துக்குச் சென்றுள்ளார்.
குறித்த இருவரும் ஒன்றாகத் தோட்டத்தை நோக்கிச் சென்றுள்ளதைச் சிலர் கண்டுள்ளனர்.
வெளியே சென்ற சிறுவன், மாலை 5 மணியாகியும் வீடு திரும்பாத நிலையில் சிறுவனின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஊர் மக்களின் உதவியுடன் குறித்த சிறுவனைத் தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, குறித்த இருவரும் ஒன்றாக தோட்டத்துக்குச் சென்றதை அவதானித்தவர்கள், சிறுவன் காணாமல் போயுள்ள தகவலை அறிந்துகொண்டதும் சிறுவனும், சிறுவனின் நண்பரான இளைஞரும் ஒன்றாகச் சென்ற விடயத்தை பிரதேச மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த சிறுவனோடு சென்றதாகக் கூறப்படும் இளைஞரை கையும் மெய்யுமாகப் பிடித்த பிரதேச மக்கள், காணாமல்போனதாகக் கூறப்படும் சிறுவன் தொடர்பில் விசாரித்துள்ளனர்.
எனினும், சந்தேகநபரான இளைஞர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களையே பிரதேச மக்களிடம் கூறிவந்துள்ளார்.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் சந்தேகநபரான குறித்த இளைஞரை  நையப்புடைத்ததுடன், தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பின்னர், காணாமல்போனதாகக் கூறப்படும் குறித்த 14 வயதுடைய சிறுவன் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் சமீரகம பிரதேசத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான குறித்த தோட்டத்திலுள்ள குப்பைமேட்டிலிருந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஏக்கநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர், பொதுமக்களின் பிடியிலிருந்த சந்தேகநபரான இளைஞரை மீட்டதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் ஆரம்பித்தனர்.
அத்துடன், பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட சந்தேகநபரான இளைஞர், பொலிஸ் பாதுகாப்பில் முந்தல் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுக் காலை சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் முஹம்மட் பஸால் விசாரணைகளை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை  புத்தளம் தள வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லுமாறும் உத்தரவிட்டார்.
குறித்த சிறுவன் கழுத்து நெறித்துக் கொலைசெய்யப்பட்டிருக்கலாமெனத் தாம் சந்தேகிப்பதாக  முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸாருடன் இணைந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சிறுவனின் படுகொலையானது சமீரகம பிரதேசத்தில் பெரும் சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *