கலப்பு நீதிமன்றம் தொடர்பில் ஐ.நாவில் மறுக்கவில்லை அரசு! – வாசு குற்றச்சாட்டு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“கலப்பு நீதிமன்றத்தையும் வெளிநாட்டு நீதிபதிகளையும் ஏற்கப்போவதில்லை என்று அரசு ஒருபோதும் ஜெனிவாவில் கூறவில்லை. இங்கு மாத்திரமே இவ்வாறான கருத்துக்களை அரசு வெளியிடுகின்றது. தேசிய அரசின் இரட்டை முகத்தை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”

– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அமெரிக்கா எமது நாடு தொடர்பில் தீர்மானங்களைக் கொண்டு வருவதற்கு யார்? எமது நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள எமக்குத் தெரியும். இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு. இந்த அரசு 2015ஆம் ஆண்டு அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதே முதலில் தவறானது. கலப்பு நீதிமன்றத்தையும், சர்வதேச விசாரணையாளர்களையும் நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

தேசிய அரசு இலங்கை மக்களிடம் ஒரு கருத்தைக் கூறுகின்றது. ஜெனிவாவில் சென்று மற்றுமொரு கருத்தைக் கூறுகின்றது. ஜெனிவாவில் ஒரு சந்தர்ப்பத்திலாது கலப்பு நீதிமன்றத்தையும், சர்வதேச விசாரணையாளர்களையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அரசு கூறவில்லை. இந்த அரசு மக்களை ஏமாற்றி வருகின்றது.

சர்வதேச உதவி இல்லாமல் இயங்க முடியாது என்பது உண்மை. அதனால் சர்வதேச உபதேசங்களையும், தொழில்நுட்பத்தையும் பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *