பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்! – சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலர் வலியுறுத்து

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சர்வதேச சமூகத்துக்கு நீதி வழங்குவதாக இலங்கை அரசு வாக்குறுதியளித்துள்ளது. காலத்தைக் கடத்தாமல் தீர்வு வழங்க இலங்கை அரசு முன்வர வேண்டும்.”

– இவ்வாறு சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலர் ஷெயில் ஷெட்டி மன்னாரில் வைத்துத் தெரிவித்தார்.

நில விடுவிப்புக்காகப் போராடும் முள்ளிக்குளம் மக்களையும், மறிச்சுக்கட்டிப் பிரதேச மக்களையும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலர் தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் சென்று சந்தித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறினர். அருட்தந்தையர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஷெயில் ஷெட்டி,

“இராணுவ முகாமுக்கு முன்னால் காணி மீட்புக்கு மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிந்து இங்கு வந்திருக்கின்றோம். நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்துள்ளோம். இன்றைய சூழ்நிலையில் இலங்கை என்று சொன்னால் உலக நாடுகளுக்குத் தெரிந்துள்ளது.

2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் நெருங்கும் நிலையிலும் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மீள்குடியேற்றம் உள்பட காணி தொடர்பான பிரச்சனைகள் அரசால் தீர்க்கப்படவில்லை.போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதை வலியுறுத்தவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். சர்வதேச சமூகத்திடம் இலங்கை வாக்குறுதியளித்துள்ள நிலையில் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

இலங்கை அரசு காலம் தாழ்த்தக்கூடாது. புதிய அரசு பதவியேற்று இரண்டு வருட காலம் முடிந்து விட்டது. அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். நாங்கள் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தலைவர்களை நாங்கள் சந்திக்கவுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகவும் அவர்களின் நீதிக்காகவும் அரசிடம் வலியுறுத்துவோம்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *