குப்பையுடன் மனித உடல் அவயங்களும் கொட்டப்படுவதால் நாடாளுமன்றில் சர்ச்சை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

குப்பைகளுடன் மனித உடல் அவயங்களும் முத்துராஜவெலயில் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா நேற்று நிராகரித்தார்.

நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்த பின்னர் நிலையியல் கட்டளையின் 23/2 இன்கீழ் குப்பைப் பிரச்சினை தொடர்பில் விசேட கூற்றொன்றை விடுத்த தினேஷ் குணவர்தன எம்.பி.,

“கழிவுகள் வீதிகளில் கொட்டப்பட்டுள்ளன. அவை அகற்றப்படவில்லை. இதனால் சூழலுக்கும் சுகாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. டெங்கு நோயும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, பிண அறைகளிலிருந்து வீசப்பட்டுள்ள மனித உடல் அவயங்களும் முத்துராஜவெலயில் கொட்டப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்” என்று சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் அந்தத் தகவலை நிராகரித்ததுடன், குப்பைப் பிரச்சினையை வைத்து சிலர் அரசியல் தேட முயற்சிக்கின்றனர் எனவும் விசனம் வெளியிட்டார்.

அதேவேளை, முத்துராஜவெல குப்பைப் பிரச்சினை தொடர்பில் மஹிந்த அணியிலுள்ள கம்பஹா மாவட்ட எம்.பிக்கள், அமைச்சர் பைசல் முஸ்தபாவிடம் கேள்விகளை எழுப்ப முற்பட்டனர். எனினும், அவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், சபையில் சிறிதுநேரம் சர்ச்சை ஏற்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *