ஜனாதிபதியின் செயலாளராக, இலங்கையின் மூத்த அரச உத்தியோகத்தர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதிய செயலாளரின் பணி, அரச சேவைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமையுமென ஜனாதிபதி தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்து வந்து பீ.பி.அபேகோன் கடந்த மாதம் 30ஆம் திகதி தனிப்பட்ட காரணங்களுக்காக தமது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், அவரது வெற்றிடத்திற்கு ஒஸ்டின் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச சேவையில் நீண்ட அனுபவத்தைக் கொண்ட ஒஸ்டின் பெர்ணான்டோ, பொலனறுவை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அரச அதிபர், தபால்மா அதிபர் ஆகிய பதவிகளை வகித்திருந்தார்.
ஜனாதிபதியின் ஆலோசகராகவும் இதற்கு முன்னர் அவர் பதவி வகித்திருந்ததோடு, கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றினார்.
தற்போது ஜனாதிபதி செயலாளராக பதவியேற்கும் வரை, அவர் கிழக்கு மாகாணத்தின் ஆளுநரான பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.