பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைந்திருப்பதற்கு உதவிபுரிபவர்கள் குறித்துத் தகவல் வழங்கினால் அவரைக் கைது செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “குறித்த தேரருக்கு பாதுகாப்பு வழங்குவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் எந்தவித தராதரமும் பார்க்காமல் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
ஞானசார தேரரைப் பிடிப்பதற்கு பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் எப்படியும் இன்னும் சில நாட்களுக்குள் அவரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
ஞானசார தேரர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் தலைமையகத்துக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்” என குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கில் ஆஜராகாமை குறித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தேரருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.