தங்களது பூர்வீக நிலத்தில் மீள்குடியேற அனுமதிக்கக்கோரி 29ஆவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இரணைதீவு மக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் பேரணி ஒன்றினை முன்னெடுத்தனர்.
கிளிநொச்சி திரேசாம்பாள் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான குறித்த பேரணி, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச அதிபரிடமும் மகஜரும் கையளிக்கப்பட்டது.
இரணைதீவு மக்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்கு செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டத்தை இம்மாதம் முதலாம் திகதி இரணைமாதா நகரில் ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில் அவர்களது போராட்டம் 29ஆவது நாளை எட்டியுள்ள நிலையிலும் மீள்குடியேற்றம் தொடர்பில் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர்கள் எமது பூர்வீக நிலம் எமக்கு வேண்டும், இரணைதீவில் நிரந்தரமாக குடியமர்ந்து தொழில் செய்யும் உரிமை வேண்டும். எமது காணிகள் கால்நடைகள் பராமரிக்க வேண்டும்.
வாழ்வாதாரத்தை மேம்படுத்த மிகச் சிறந்த இடம் வேண்டும், எமது தீவு எம்மைவிட்டுப் பறிபோகும் அபாயாத்திலிருந்து காப்பற்றப்பட வேண்டும், தீவின் வளங்கள் அந்நியர்களால் சூறையாடப்படும் நிலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், தீவை ஆக்கிரமித்துள்ள கடற்படை முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இம்மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இப்பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.