நல்லாட்சியில் தமிழ் மக்கள் பெற்ற நன்மைகள் மிகவும் குறைவு: மாவை
தமிழ் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில் மிகவும் நம்பிக்கையுடனும் கனத்த மனதுடனும் உங்களை சந்திக்கிறேன். உங்களது நல்லாட்சியிலும் தமிழ் மக்கள் பெற்றிருக்கும் நன்மைகள் மிகவும் குறைவு என தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ‘ஐனாதிபதியிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டு அலுவலகம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் ஜனாதிபதி முன்னிலையில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘பட்டதாரி மாணவர்கள் வெளியே கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 30 வருடங்களாக மோசமான போரினால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் இன்றைக்கு பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னரும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்.
இதேபோல் படையினரின வசம் உள்ள காணிகள் விடுவிக்கப்படும் எனக் கூறியிருந்தீர்கள். மேலும் காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையும் இல்லை. எனவே மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில் மிகுந்த நம்பிக்கையுடனும் கனத்த மனதுடனும் உங்களை சந்திக்கிறேன். உங்களுடைய ஆட்சி காலத்திலும் நாங்கள் மிகவும் சிறிய அளவிலான நன்மைகளையே பெற்றிருக்கிறோம்.
இதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் படசத்திலேயே இலங்கையில் இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கம் உண்டாகும்’ என்றார்.




