யுத்தக் குற்ற விவகாரம் : தண்டனை வழங்காதிருக்க ஸ்ரீலங்கா பிடிவாதம்
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கு சட்டவிலக்களிப்பை வழங்குவதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பிடிவாதமாக உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
2016/2017 ஆம் ஆண்டுக்கான 159 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் மனித உரிமை விடயங்கள் குறித்த சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டத்தின் கீழுள்ள யுத்தக் குற்றங்கள் தொடர்பில், பொறுப்புகூறலை ஸ்ரீலங்கா தொடர்ந்தும் வலியுறுத்துகின்ற போதிலும், அதன்முன்னேற்றம் மிகவும் மந்த கதியிலேயே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழான கைதுகள் மற்றும் தடுத்து வைப்புக்கள் குறித்து அதிகாரிகள் மௌனம் காக்கின்றமை, பொலிஸ் காவலில் உள்ள போது துன்புறுத்தப்படுகின்றமை, தவறாக நடத்தப்படுகின்றமை, வலிந்து காணாமல் ஆக்கப்படுகின்றமை மற்றும் ஏனைய வன்முறைகளுக்கு சட்டவிலக்களிப்பு வழங்குதல் உள்ளிட்ட பல மனித உரிமை சவால்கள் ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் காணப்படுவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிவாரணம் மற்றும் நட்டஈட்டுத் திட்டங்கள் இதுவரை அமுல்படுத்தப்படாத நிலையில், ஆயுத மோதல்களின் போது வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் சவாலை எதிர்நோக்குவதாக சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது.