“யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களைக் காரணங்காட்டி முப்படைகளைப் பாதுகாப்புக்குப் பயன்படுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்காது.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறியிருந்தார். அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே மாவை சேனாதிராஜா எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதியும், பிரதமரும் சிறந்த நிர்வாகத் திறமையும், நேர்மைப் பண்புகளையும் கொண்ட பொலிஸாரை வடக்கு, கிழக்கில் கடமைகளில் ஈடுபடுத்துவதன் ஊடாக போதைப்பொருள் கடத்தல்களையும், வாள்வெட்டுச் சம்பவங்களையும் கட்டுப்படுத்தமுடியும். இதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதியும், பிரதமரும் உடன் எடுக்கவேண்டும்.
பொலிஸார் நேர்மையாகச் செயற்படும்போது பொதுமக்கள் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள்” – என்றார்.