Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இம்மாத இறுதிக்குள் கேப்பாப்பிலவு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்! – ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசர கடிதம்

இம்மாத இறுதிக்குள் கேப்பாப்பிலவு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்! – ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசர கடிதம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஒரு மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை மீளவும் நினைவூட்டிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அந்தக் காணிகள் மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கு உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

“கடந்த மே மாதம் 18ஆம் திகதி நானும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் குறித்த காணிக்குச் சென்று, அந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பான இராணுவக் கட்டளை அதிகாரியுடன் கலந்துரையாடினோம். 243 ஏக்கர்கள் அடங்கிய காணித்துண்டு உடனடியாகவே விடுவிக்கப்பட முடியும் என்றும், 189 ஏக்கர்கள் அடங்கிய 2ஆவது காணித்துண்டு ஒரு மாத காலத்துள் விடுவிக்கப்பட முடியும் என்றும், 111 ஏக்கர்கள் அடங்கிய 3ஆவது காணித்துண்டு 6மாத காலமளவில் விடுவிக்கப்பட முடியும் என்றும், 70 ஏக்கர்கள் 2 றூட்கள் அடங்கிய 4ஆவது காணித்துண்டை விடுவிப்பதில் தாம் சில கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும் இராணுவக் கட்டளை அதிகாரி தெரிவித்தார்.

நான் கொழும்பு திரும்பியவுடன், அப்போதிருந்த இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவுடன் மேலே கூறப்பட்ட 70 ஏக்கர்களும் 2 றூட்களும் அடங்கிய 4ஆவது காணித்துண்டை விடுவிப்பது பற்றிக் கலந்துரையாடியபோது, அதனை விடுவிக்க முடியும் என்று அவர் கூறினார். முல்லைத்தீவு, கேப்பாப்பிலவில் உள்ள எல்லாக் காணிகளையும் ஜூலை மாத இறுதிக்குள் விடுவிப்பதாகவும் சொன்னார்.

ஜூன் மாதம் 23ஆம் திகதி தங்களை நான் சந்தித்தபோது 70 ஏக்கர்கள் 2 றூட்கள் அடங்கிய காணித்துண்டு உட்பட கேப்பாப்பிலவில் உள்ள எல்லாக் காணிகளையும் விரைவில் விடுவிக்கும்படி படையினருக்குக் கூறும்படி தங்களிடம் கோரியிருந்தேன். தாங்களும் அவ்வாறு செய்வதாக எனக்கு உறுதியளித்தீர்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு காணிகள் எல்லாமே அதன் உரிமையாளர்களான மக்களுக்கு விடுவிக்கப்படுவதற்கு அவசரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று வலுவான கோரிக்கையை நான் விடுக்கிறேன். மாத இறுதிக்குள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவுக் காணிகள் யாவும் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கண்ணியமாகக் கோருகின்றேன்” – என்றுள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …