நீதிபதியை இலக்கு வைத்த துப்பாக்கிச்சூடு: ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் சபூர்தின்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.சபூர்தின் தெரிவித்தார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து இன்று (திங்கட்கிழமை) மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சனிக்கிழமை மாலை நல்லூரில் நீதவான் இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைக் கண்டித்து இன்று மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லாது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளோம்.

குறித்த சம்பவம் துக்ககரமானதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுமாகும். நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள சவாலாகவும், சுதந்திரமான நீதித்துறையை நடத்த விடாமல் தடுக்கின்ற ஒரு நிகழ்வாகவும் நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த சம்பவத்திலே ஒரு பொலிஸ் சார்ஜன் உயிரிழந்துள்ளார். அவருடைய குடும்பத்தினருக்கு மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பொலிஸ் சார்ஜன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் எழுந்தமானமான கருத்துக்களை கூறாமல் சரியான முடிவுகளை வெளிப்படுத்தி சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கின்றோம்” என சட்டத்தரணி எம்.எம்.சபூர்தின் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *