“நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை” என்று சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைக் கூறினார்.
இன்று புதன்கிழமை யாழ். பொது நூலகத்துக்கு விஜயம்செய்து நூல்களை அன்பளிப்புச் செய்யவுள்ளதாகவும், நூலக ஊழியர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் எலும்பு இயல் திணைக்களத்துக்கு சிங்கப்பூர் உதவவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமிடையே நீண்டகாலமாக இருந்துவரும் இருதரப்பு உறவுகளை இந்தச் சந்திப்பின்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ்ப்பாண பொது நூலகத்துக்கும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கும் சிங்கப்பூர் வழங்கும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சர்வதேச மன்றங்களில் சிங்கப்பூர் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கும் ஜனாதிபதி நன்றி கூறினார்.
இலங்கையில் சிங்கப்பூர் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன எனவும் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சுற்றுலா மற்றும் உபசரிப்புத்துறைகளில் சிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு நல்ல முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன என்று ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஏற்கனவே 300இற்கும் மேற்பட்ட சிங்கப்பூர் முதலீடுகள் உள்ளதாகக் குறிப்பிட்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பாலகிருஷ்ணன், சக்திவளம், நீர், கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் முதலீடுகளைச் செய்யும் வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் சர்வதேச உறவுகள் தொடர்பில் பாராட்டுகளைத் தெரிவித்த கலாநிதி பாலகிருஷ்ணன், பலம்பொருந்திய அயல்நாடுகளுக்குப் பக்கத்திலுள்ள சிறிய நாடுகள் என்றவகையில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் வெளியுறவுகள் மற்றும் வலுச் சமநிலையில் மிகுந்த கவனத்துடன் செயற்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, வெளிவிவகார செயலாளர் எசல வீரகோன், சிங்கப்பூர் தூதுவர் எஸ்.சந்திரதாஸ் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.