தமிழீழ விடுதலைப் புலிகளின் துரோகிகள் பட்டியலில் இருந்த குமார் பொன்னம்பலத்தை நாமே காப்பாற்றினோம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 28 வது வீர மக்கள் தினம் மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்றையதினம் (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார். இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புலிகளின் துரோகிகள் பட்டியலில் குமார் பொன்னம்பலம் இருந்தார் அதற்கு சாட்சி நான். அவரைப் புலிகளிடம் இருந்து நாங்கள் காப்பற்றி இருக்காவிடில் அவர் துரோகிகள் பட்டியலில் தொடர்ந்தும் இருந்திருப்பார்.
அதன்பின்னரே அவருக்கு மாமனிதர் பட்டமும் வழங்கப்பட்டது. இந்த வரலாற்றினைத் தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.
இன்று முகநூல்கள் மற்றும் இணையத்தளங்களில் போராட்டம் குறித்து முழுமையாக அறியாத பலர் எழுதுகின்றனர். ஒரு சில பத்திரிகையாளர்களைத் தவிர ஏனைய பத்திரிகைகள் தவறான விளக்கங்களுடனேயே இருக்கின்றனர்” என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.