டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருக்கமுடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்திக்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளது.
தேசிய அரசிலிருந்து வெளியேறுமாறு சுதந்திரக் கட்சியின் அதிருப்திக்குழுவைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர்.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருக்குமாறும், வரவு – செலவுத் திட்டத் தொடருடன் முடிவெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருக்கமுடியாது என்று அதிருப்திக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறாமல் இருப்பதாக இருந்தால், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கவேண்டும். எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு எமக்கு அனுமதி வழங்கவேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஜனாதிபதி ஏற்க மறுத்தால், தாம் வெளியேறுவோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கும் நடவடிக்கையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காக குமாரதுங்க ஈடுபட்டுள்ளார்.