Monday , June 23 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புதிய அரசமைப்பைக் கொண்டுவரவே 62 இலட்சம் மக்கள் ஆணையை வழங்கினர்! – ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவிப்பு 

புதிய அரசமைப்பைக் கொண்டுவரவே 62 இலட்சம் மக்கள் ஆணையை வழங்கினர்! – ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவிப்பு 

“புதிய அரசமைப்புத் தொடர்பில் எவருக்கும் கருத்துத் தெரிவிக்கமுடியும். அவ்வாறே மகாநாயக்க தேரர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். இது குறித்து பரிசீலிக்கவேண்டியது கட்டாயமானதாகும். ஆனால், 62 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் நல்லாட்சி அரசுக்கு ஆதரவளித்தது புதிய அரசமைப்பொன்றை கொண்டுவருவதற்காகவே. மக்களின் ஆணையின் அடிப்படையில் அரசு செயற்படும்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார்.
புதிய அரசமைப்பு தற்போதைய சூழலில் நாட்டுக்கு அவசியமில்லை. தேர்தல் முறையில் மறுசீரமைப்பு செய்தால் மாத்திரமே போதும் என்ற மகாநாயக்க தேரர்களின் அறிவிப்பு நாட்டில் விவாதப் பொருளாகியுள்ளமை தொடர்பில் ஜயம்பதி விக்கிரமரத்னவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“புதிய அரசமைப்பொன்றை கொண்டுவருவது தொடர்பில் நாடாளுமன்றில் வழிநடத்தல் குழு செயற்பட்டுவருகிறது. கடந்த இரு வாரங்களாக இடம்பெற்ற வழிநடத்தல் குழுக் கூட்டங்களில் பல்வேறு இணக்கமான முடிவுகள் எட்டப்பட்டு அனைவரும் ஒருமித்த நிலைக்கு வரக்கூடிய நிலைமை காணப்படுகிறது. அதனடிப்படையில் அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை மிக விரைவில் வெளிவரும்.
புதிய அரசமைப்பு குறித்து நாட்டில் அனைவருக்கும் கருத்துத் தெரிவிக்க சுதந்திரம் உள்ளது. அதனடிப்படையில் எவரும் தமது நிலைப்பாட்டை அறிவிக்கமுடியும். அவ்வாறே மகாநாயக்க தேரர்களும் அறிவித்துள்ளனர். ஆனால், புதிய அரசமைப்பொன்றை கொண்டுவருவதற்கே  2015ஆம் ஆண்டு 62 இலட்சம் மக்கள் வாக்களித்திருந்தனர்.
மக்களின் கோரிக்கை புதிய அரசமைப்பொன்று நாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதே. எனவே, அதனடிப்படையில் அரசு செயற்படும். என்றாலும், அனைவரினதும் கருத்துகளை அரசு உள்வாங்கும் என்பதும் சுட்டிக்காட்டப்படவேண்டியது” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …