“புதிய அரசமைப்புக்கு அஸ்கிரிய பீடம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், இது தமிழர் மீதான பல்குழல் தாக்குதலாகும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாவற்குழியில் சிங்கள மக்கள் வாழவே இல்லை. இருந்தும் அங்கு வலுக்கட்டாயமாக சிங்களவர்கள் பிக்குகளின் ஆசியுடன் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, இரத்தத்தை வழங்கிவிட்டு வடக்கிலுள்ளவர்களின் உடலில் இன்று இராணுவத்தினதும், பிக்குகளினதும் இரத்தமே ஓடுவதாக ஆளுநர் பெருமை பேசித் திரிகின்றார். திசைதிருப்பும் வகையிலான கருத்துகளையே வடக்கு ஆளுநர் வெளியிட்டு வருகின்றார்.
அதேவேளை, இன்று பத்திரிகைகளைப் புரட்டினால் புதிய அரசமைப்புக்கு அஸ்கிரிய பீடம் கடும் எதிர்ப்பு, உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும்வரை அரசமைப்புப் பணிகளில் எதிரணி பங்கேற்காது என மஹிந்த அணி அறிவிப்பு என்றெல்லாம் செய்திகள் வெளிவந்துள்ளன. இது கிட்டத்தட்ட தமிழர் மீதான பல்குழல் தாக்குதலாகவே இருக்கின்றது.
விடுதலைப்புலிகள்தான் பல்குழல் பீரங்கித் தாக்குதலை அறிமுகப்படுத்தினர். பிரிகேடியர் பால்ராஜ் அதை நெறிப்படுத்தினார். அதே பீரங்கியால் தாக்குவதுபோல்தான் அறிவிப்புகள் வருகின்றன” – என்றார்.