“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேசிய அரசுடன் இணைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாட்டைத் துரிதமாக முன்னேற்றிவிடலாமே.”
– இவ்வாறு ஆசைப்படுகின்றார் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“இந்தத் தேசிய அரசில் அனைவரும் இணைந்து இந்த நாட்டின் அபிவிருத்திக்காக வேலை செய்யவேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தகூட எம்முடன் இணையவேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்.
மைத்திரி அணி, ரணில் அணி மற்றும் மஹிந்த அணி என மூன்று அணிகளும் ஒன்றுசேர்ந்தால் அதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் இந்த நாட்டுக்குக் கிடைக்காது. நாட்டை முன்னேற்றுவதற்கு அதைவிட ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காது. ஆனால், அது நடக்குமா என்பதுதான் சந்தேகம்.
குறுகிய அரசியல் இலாபங்களை ஒதுக்கிவைத்துவிட்டு நாம் ஒன்றிணைவதுதான் நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது. அதற்கான அழைப்பை நாம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுக்கின்றேன். ஒருவரை ஏசிக்கொண்டு விமர்ச்சித்துக்கொண்டு அரசியல் செய்வதால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
நான்தான் ஆட்சிசெய்ய வேண்டும் என்ற மனோநிலையை ஒதுக்கிவைத்துவிட்டு நாம் ஆட்சிசெய்வோம் என்ற நிலைப்பாட்டுக்கு நாம் எல்லோரும் வரவேண்டும். அவ்வாறில்லாது போலியாக நாம் தேசபக்தி பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. அது பொய்யான நாட்டுப்பற்றாகும்.
எம்மைவிட பின்நின்ற எத்தனையோ நாடுகள் முன்னேறிவிட்டன. ஆனால், நாம் பின்னோக்கியேதான் சென்றுகொண்டிருக்கின்றோம். எமது பிழையான அரசியலே இதற்குக் காரணம். இந்த அரசியல் கலாசாரம் மாறவேண்டும். அப்போதுதான் நாமும் ஏனைய நாடுகளைப்போல் முன்னுக்கு வரமுடியும்” – ன்று கூறியுள்ளார்.