ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்தும் அமுலாக்கக் குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இதற்கான பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, அதற்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இறுதிக்கப்பட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது.
குறித்த பிரேரணையின் பெரும்பாலான வாக்குறுதிகள் இன்னும் செயற்படுத்தப்படாத நிலையில், கடந்த அமர்வின் போது மேலும் இரு வருட கால அவகாசத்தை இலங்கை பெற்றுக்கொண்டது.
இதனடிப்படையில் குறித்த பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை துரிதமாக நடைமுறைப்படுத்தும் வகையில் இக் குழு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.