மேற்கு லண்டனில் தொடர்மாடிக் கட்டட தீ விபத்தினால் ஏற்பட்ட பேரழிவிற்கு வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கை அரசின் சார்பில் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
27 மாடி குடியிருப்பு கட்டடத்தில் நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தானது பேரதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்த அவர், அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் அன்பான உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்தார்.
அதேவேளை, காயங்களுக்கு உள்ளானவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேற்படி அனர்த்தத்தினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், இவ்விடயம் குறித்து கூடுதல் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.