மகிந்தவின் வீழ்ச்சிக்கு காரணம் யார்? நுகேகொடையில் மீண்டும் தோல்வி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீள் எழுச்சி திரும்பத் திரும்ப தடைப்பட்டுக் கொண்டு போவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் கூட்டு எதிர்க் கட்சியினர் நுகேகொடையில் பொதுக்கூட்டமானது பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.
மக்கள் ஆதரவை மகிந்த மீண்டும் பெறுவதற்கான பெரும் முயற்சியாக இது பார்க்கப்பட்டதோடு, தன்னுடைய மக்கள் ஆதரவை இன்றைய ஆட்சியாளர்களுக்கு காட்டுவதற்குமான ஏற்பாடாக இருந்தது.
எனினும், அது தோல்வியில் தான் முடிந்ததாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதுடன், அரசியல் தலைவர்களும் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.
இது குறித்து கருத்து வெளியிட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரான பீ.ஹரிசன்,
கூட்டு எதிர்க்கட்சி நுகேகொடையில் நேற்று நடத்திய பொதுக் கூட்டம் தோல்வியானது.
இந்த கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறி விட்டு, பின்னர் அமைச்சர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் எனக் கூட்டு எதிர்க்கட்சியினர் கூறியதன் மூலம் இது உறுதியாகியுள்ளது.
இதேவேளை, நுகேகொடை கூட்டத்திற்கு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் எனக்கூறப்பட்ட போதிலும் வெறும் 18,000 பேரே வந்ததாக அரச புலனாய்வு பிரிவு அறிக்கையளித்துள்ளதாகவும் என்றும் அவர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்.
நாட்டில் இன்றுள்ள நிலையில், தன்னுடைய மக்கள் ஆதரவை மகிந்த ராஜபக்ச நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.
இது உள்நாட்டுக்கு மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் உள்நாட்டில் தனக்கான ஆதரவு இன்றளவும் இருப்பதாகவே அவர் காட்ட முனைகிறார்.
எனினும் அது தோல்வியில் முடிந்ததாக அமைச்சர் குறிப்பிட்டிருப்பதோடு, புலனாய்வு அறிக்கையும் கிடைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், தன்னை வீழ்த்திய சர்வதேசத்திற்கு ஒரு பாடத்தை வெளிப்படுத்தவும் அவர் விளைந்திருக்கிறார்.
முன்னதாக “மஹிந்த ஆட்சியில் பொருளாதார நெருக்கடி இருந்தது உண்மை. அந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான ஆற்றல் மஹிந்தவிடம் இருக்கவில்லை. அதைத் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பத்தை சர்வதேசம் வழங்கவும் இல்லை. மஹிந்த மிகவும் திண்டாடத் தொடங்கி விட்டார்.
பொருளாதாரப் பிரச்சினையைச் சமாளிப்பதற்காக மஹிந்த காணிகளை தனியாருக்கு விற்கவும் செய்தார்.
இதற்கு எதிராக நான் அமைச்சரவைக்குள் குரல் எழுப்பிய போதும், பெரும்பான்மை குரல்கள் மூலம் எனது குரல் தோற்கடிக்கப்பட்டது.
அரச காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்க முடியாது என்ற சட்டத்தை ரணில் விக்கிரமசிங்க 2002 இல் பிரதமராக இருந்தபோது நிறைவேற்றினார்.
அந்தச் சட்டத்தை மீறித்தான் மஹிந்த நிலங்களை விற்றார். அதை மறந்துவிட்டு இந்த அரசு காணிகளை விற்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றார்.
இந்த அரசில் காணிகள் விற்கப்படவில்லை. தனியாருடன் சேர்ந்து பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்தவகையில்தான், அம்பாந்தோட்டையில் வர்த்தக வலயம் அமைக்கப்படுகின்றது.
பொருளாதார நிலையில் மிக மோசமாக நாடு இருந்தமையினால் தான் சர்வதேசத்தின் பாரிய அழுத்தம் மகிந்தவிற்கு இருந்தது.
இதன் காரணமாகவே மஹிந்த முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார் என்றும் அமைச்சர் விஜிதமுனி சொய்சா கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இது உண்மையில் அன்று நடந்தது தான். இதனால் தான் அவர் அன்று ஆட்சியை இழக்க நேரிட்டது. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் சர்வதேசம் அழுத்தம் கொடுத்தது என்பதையும் அன்று அவர்கள் ஒத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் இப்படியொரு மாற்றம் வரும் என்று அவர் எதிர் பார்த்திருக்கவில்லை.
தன்னுடைய தோல்வி உறுதியானது என்று தெரிந்ததும், அவர் அலரிமாளிகையை விட்டு வெளியேறும் போது தான் மீண்டும் மக்கள் பலத்தை நிரூபிப்போன் என்று உறுதியெடுத்திருந்தார்.
ஆனால் அவரினால் இன்றளவும் அந்த உறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்கிறார்கள் தென்னிலங்கை அவதானிகள்.
எது எவ்வாறெனினும், இன்றைய இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியில் பலம் வாய்ந்த, நம்பிக்கைக்குரிய அரசாக மாறிவருகிறது.
இதனை தடுப்பது கடினம் என்பதை உணர்ந்த முன்னாள் ஜனாதிபதி மக்கள் பலத்தை காட்ட வேண்டும் என்பதை நினைத்து நடத்தும் கூட்டம் மக்கள் மத்தியில் பெரிதும் இடம்பெறவில்லை.
இதில் இருந்து அவர் தன்னை எப்படிச் சுதாகரித்துக் கொள்வார் என்பதனை அவரின் அடுத்தகட்ட நகர்வுகள் தான் உறுதிப்படுத்தும்.




