இந்தியா தெற்கிற்கு வழங்கினால் சகோதரத்துவம் மலையக தமிழர்களுக்கு வழங்கினால் இனவாதமா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கின்ற பொழுது அதனை ஒரு சிலர் இனவாத கண் கொண்டு பார்க்கின்றார்கள்.ஆனால் இந்தியாவில் இருந்து வைத்தியர்கள் இங்கு வருகின்ற பொழுது அவர்களிடம் வைத்திய சேவையை பெற்றுக் கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம்.எத்தனையோ இந்திய வைத்தியர்கள் இன்று இலங்கையில் பல சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பல உயிர்களை பாதுகாக்கின்றார்கள்.ஆனால் மலையக பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து அழைப்பதை ஒரு சிலர் இனவாத கண் கொண்டு பார்ப்பதை எந்த விதத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

புத்தளம் ஆண்டிமுனை ஸ்ரீ கிருஸ்ணா ஆரம்ப பாடசாலை,ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம்,உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்று பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடுகளை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவாவி மற்றும் புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் என்எம்.நஸ்மி ஆகியோர் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

அதிபர்களான கே.தொண்டமான்,என்.பத்மாநந்தன்,சந்திரசுபநேமி ஆகிய அதிபர்கள் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.இதன் போது உடப்பு மற்றும் புத்தளம் மாவட்டத்தில் தமிழ் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.இங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவாவி கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து அங்கு பேசிய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,

நான் இன்று ஒரு தமிழ் இராஜாங்க கல்வி அமைச்சராக இருக்கின்ற காரணத்தினால் இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.அதே நேரத்தில் மலையகம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலைகளில் நிலவுகின்ற முக்கிய பிரச்சினையான உயர்தர கணித விஞ்ஞான பாடங்களை கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.இதற்காக நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்காக எம்மிடம் ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் நாம் தமிழ்நாட்டில் இருந்து இங்கிருந்து சென்றவர்களை மீண்டும் இங்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.

ஆனால் இதனை ஒரு சில பெரும்பான்மையினர் இனவாத கண் கொண்டு பார்க்கின்றார்கள்.அவர்கள் மலையக மாணவர்களும் தமிழ் மாணவர்களும் கல்வியில் முன்னேற்றமடைவதை விரும்பவில்லையா?என்ற கேள்வியை கேட்க தூண்டுகின்றது.எங்களுடைய பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றமடைந்தால் வீட்டு வேளைகள் செய்வதற்கு யாரும் கிடைக்க மாட்டார்கள் என்ற என்னத்தில் அவர்கள் இதனை எதிர்ப்பதாகவே நான் பார்க்கின்றேன்.இந்த எதிர்ப்புகளை கண்டு நான் தயங்க மாட்டேன்.யார் எதிர்த்தாலும் இதனை செய்து முடிக்க நான் தீர்மானித்திருக்கின்றேன்.

இதற்காக பிரதமரின் அனுமதியும் கிடைத்துள்ளது.எங்களிடம் இல்லாவிட்டால் வேறு என்ன செய்வது என்பதை இதனை எதிர்ப்பவர்கள் தெரிவிக்க வேண்டும்.புத்தளம் உடப்பு ஆகிய பகுதிகளில் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் இருந்தால் அவர்களை மலையக பகுதிகளில் கடமையாற்ற தயாராக இருந்தால் உடனடியாக என்னுடைய அமைச்சுடன் தொடர்பு கொள்ளவும்.அவர்கள் இணைத்துக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றேன்.எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *