ஆசிரிய உதவியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகளை நிலுவையுடன் வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் சுற்றுநிருபங்கள் மாகாண பிரதான செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நேற்றையதினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தொிவித்த இராஜாங்க அமைச்சர், “கடமையில் ஈடுபட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கான 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் மேலதிக கொடுப்பனவு தொகையான 4 ஆயிரம் ரூபாவையும் சேர்த்து மொத்தமாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.
நிலுவை தொகை மற்றும் பெப்ரவரி மாதம் முதல் ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்த மேலதிக கொடுப்பனவுகள் தொடர்பில் பல்வேறு இழுபறிநிலை ஏற்பட்டபோதிலும், என்னுடைய தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாக அண்மையில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து அதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டார்.
இந்த ஆசிரிய உதவியாளர்களின் ஒத்துழைப்புடனான கற்பித்தலினால் தற்போது மலையக கல்வி பெறுபேறுகளில் அபிவிருத்தியை காணக் கூடியதாக உள்ளது. ஆகவே இவர்களை ஒரு முழுமையான ஆசிரியர்களாக உருவாக்குவதற்கு என்னால் ஆன அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.