வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் வைத்தியர்கள் மாலை வேளையில் தனியார் வைத்தியசாலைகளில் அதிக கொடுப்பனவுக்கு பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்பதிவு முறையில் தனியார் வைத்தியசாலைகளில் அதிக கொடுப்பனவுக்கு வைத்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு வைத்தியரும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். சில விளையாட்டு வீரர்கள் குறிப்பிட்ட தனியார் வைத்தியசாலையில் இன்று மாலை 4 மணிக்கு மேற்படி வைத்தியரை சந்தித்து ஆலோசனை பெறுவதற்கு நேரம் ஒதுக்கியுள்ளனர். இந்த மருத்துவ ஆலோசனை சேவைக்கு அவர் ஆயிரத்து 950 ரூபாவை அறவிடுகிறார்.
எனினும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டம் தோல்வியடைந்துள்ளது” என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.