வவுனியா – செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாகவும் இன்று (செவ்வாய்க்கிழமை) மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிதாக அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நித்தியானந்தம் என்பவர், ஏற்கனவே பதவி வகித்த பாடசாலைகளில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் இதன் காரணமாக குறித்த நியமனத்தை இரத்து செய்யுமாறும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த பாடசாலைக்கு தரம் 1 அதிபர் நியமிக்கப்படவேண்டும் எனவும் அதற்கான தகுதி தனக்கு இருக்கின்ற போதிலும் நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்து நித்தியானந்தம் உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார். இதன் அடிப்படையிலேயே குறித்த அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தவணை ஆரம்பித்த நாளில் இருந்து மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாது இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு வழங்கி வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.