சொந்த நிலத்துக்கே உரிமை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேச தமிழ்மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வேறு பிரதேச சிங்கள மீனவர்கள் தமது நிலங்களுக்கு தற்போது உரிமை கொண்டாடிவருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கொக்கிளாய் கடலில் தமது மீன்பிடிக்கான கரைவலைப்பாடுகளை சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளமை தொடர்பான வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இன்றைய வழக்கு விசாரணைகளில் கொக்கிளாய் மீனவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகாத நிலையில், வழக்கை அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் ஒத்திவைத்தார்.
மனுதரரான நீரியல் வளத் திணைக்களம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், குறித்த பகுதியில் சிங்கள மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டதாக கொக்கிளாய் பிரதேச மீனவ குடும்ப பிரதிநிதியான ரொபேட் பாஸ்கரன் வசந்தகுமாரி குறிப்பிட்டார்.
இதேவேளை முல்லைத்தீவு கொக்குளாய் கடற்கரையோரத்தில் மீனவர்கள் படகுகளை விடுவிதற்குரிய இடம் (பாடுகள்) தொடர்பில் எழுந்த பிரச்சினையை அடுத்து நீரியல்வளத்திணைக்களத்தால் கடந்த வருடம் ஜுலை மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மூன்றாம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட நிலையில், பிரதேசசெயலாளரால் வழங்கப்பட்ட பிரதேசத்தை அளவீடு செய்த நிலஅளவை திணைக்களம், குறித்த பகுதி நீரியல் வளத் திணைக்களத்திற்கு சொந்தமானது அல்ல என நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தது.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த நீரியல்வளத் திணைக்களம் மீண்டும் அளவீடுகளை மேற்காள்ள வேண்டும் என வாதாடிய நிலையில் வழக்கு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.