காணாமல் ஆக்கப்பட்டோரின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி கிளிநொச்சி, வவுனியாவில் 27ஆம் திகதி ஹர்த்தால்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுவிப்பையும் வலியுறுத்தி எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்படவுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் அதில் இணையுமாறு அழைக்கின்றோம்.”

– இவ்வாறு கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டடோர் உறவினர்கள் சங்கத் தலைவி கலாரஞ்சினி இது தொடர்பில் தெரிவிக்கையில்,

“காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்தவும், விடுவிக்கவும் வலியுறுத்தி அவர்களது உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக தொடர் போராட்டம் நடத்தப்படுகின்றது. அவர்களுக்கு இதுவரை எந்தவித பதிலும் உரிய தரப்புகளிடம் இருந்து வழங்கப்படவில்லை.

நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்து இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் 63 நாட்களாகின்றன. நாங்கள் அநாதைகள் போன்று வீதியில் போராடி வருகின்றோம். எங்களை அனைவரும் கைவிட்டுள்ளனர். எமது பிரச்சினைக்குத் தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டும் என்றே நாம் போராட்டத்தில் இறங்கினோம். ஆனால், எமது கோரிக்கைகளை எவரும் கண்டுகொள்ளவில்லை. எதிர்வரும் 27ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் நடத்துவதற்கு அழைப்பு விடுகின்றோம்.

வர்த்தகச் சங்கங்கள், பொது அமைப்புக்கள், போக்குவரத்துச் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள் என அனைவரும் இணைந்து எமது போராட்டத்துக்கு வலுச் சேர்த்து ஒத்துழைக்க வேண்டுகின்றோம்” – என்றார்.

இதேவேளை, வவுனியாவிலும் எதிர்வரும் 27ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு வர்த்தக சங்கம், பொது அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வவுனியாவில் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் கேட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கத் தலைவி காசிப்பிளை ஜெயவதனா இது தொடர்பில் மேலும் ஹெரிவிக்கையில்,

“எதிர்வரும் 27ஆம் திகதி கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்வர்களின் வெளிப்படுத்தலைக் கோரி போராட்டம் மேற்கொண்டு வருபவர்கள் பூரண ஹர்த்தாலை கிளிநொச்சியில் அனுஷ்டிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலும் கடந்த 59 நாட்களாக, காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை வெளிப்படுத்துமாறு கோரி போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம். எனவே, எமது உறவுகளைக்கண்டு பிடித்து எம்மிடம் ஒப்படைக்கும் இந்தப் போராட்டத்துக்கு வவுனியா வர்த்தக சங்கம், தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் ஆகியவை ஆதரவு வழங்கி எதிர்வரும் 27ஆம் திகதி வவுனியாவில் பூரண ஹார்த்தாலை அனுஷ்டிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி வடக்கில் 4 மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்று கிளிநொச்சியில் 63ஆவது நாளாகவும், வவுனியாவில் 59ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 47ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் 40ஆவது நாளாகவும், திருகோணமலையில் 50ஆவது நாளாகவும் போராட்டங்கள் தொடர்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *