ஒரு மாத காலத்திற்கு மேலாகப் போராடிவரும் எமக்கு, இந்த அரசாங்கம் வழங்கும் வீட்டுத்திட்டம் போன்ற உதவித்திட்டங்கள் தேவையில்லை, நாம் உழைத்து முன்னேறுவோம். என பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமக்கான காணி உறுதியினை மட்டும் தற்போதைக்கு பெற்றுத்தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 31ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.
இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இது குறித்துத் தெரிவிக்கையில்,
“யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். நாம் வாழ்ந்த இந்த நிலத்தையாவது அரசாங்கமோ அல்லது சம்பந்தப்பட்டவர்களோ வழங்க முன்வரவேண்டும். எமக்கு வீட்டுத்திட்டமோ அல்லது அரச உதவிகளோ எதுவும் தேவையில்லை. எமக்கு எமது காணிகளின் அனுமதிப் பத்திரங்களை தந்தால் மட்டும் போதுமானது”என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.