கல்முனை கல்வி வலயத்திலுள்ள சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் கட்டடம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலைக்கு முன்பாக வீதியின் ஓரமாக அணிவகுத்து பல்வேறு சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் நிலவும் வகுப்பறை பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இருமாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக அண்மையில் அடிக்கல் நடப்பட்டு, பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், குறித்த கட்டடத்தை விளையாட்டு மைதானத்தில் அமைப்பதன் மூலம் தமது விளையாட்டுத் திறமைகள் மழுங்கடிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட பாடசாலை மாணவர்கள்,
குறித்த கட்டடத்தை வேறொரு இடத்தில் நிர்மாணிக்குமாறு கோரியே இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டனர்.