புத்தளம் ஆதார வைத்தியசாலையின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்யுமாறு கோரியும், வைத்தியசாலையை மாவட்ட பொது வைத்தியசாலையாக தரம் உயர்த்த கோரியும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள பிரதான சுற்று வட்டத்துக்கு அருகில் நேற்று (வெள்ளிக்கிழமை) இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச சுகாதார தினத்தை முன்னிட்டு புத்தளம் இளம் பிரஜைகள் சங்கம் குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிக்கு முன்பாக இருந்து புறப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம், பிரதான வீதி ஊடாக புத்தளம் நகரின் பிரதான சுற்று வட்டத்தை வந்தடைந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வைத்தியசாலைக்கான தேவைகளை எடுத்துரைக்கும் வகையிலான பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
மேலும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன புத்தளம் வைத்தியசாலைக்கு நேரில் வருகை வந்து நிலைமைகளை அவதானிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.