கேப்பாபிலவுக் காணிகள் நிச்சயம் விடுவிக்கப்படும்! – சம்பந்தனிடம் இராணுவத் தளபதி உறுதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் நிச்சயமாக விடுவிக்கப்படும் என்று இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வா, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.

இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கேப்பாப்பிலவில் உள்ள 468 ஏக்கர் காணியை இராணுவத்தினர் கைப்பற்றி வைத்துள்ளனர். இராணுவத் தலைமையகமும் அதில் அமைந்துள்ளது. இந்தக் காணியை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை இரவு, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இந்தநிலையில், மூன்று நாட்களின் பின்னர் அதாவது கடந்த வியாழக்கிழமை, இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வாவுடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பேச்சு நடத்தியுள்ளார். கேப்பாப்பிலவுக் காணி விடுவிப்புத் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரால் வினவப்பட்டது.

அதற்கு இராணுவத் தளபதி, அந்தக் காணிகளை நிச்சயம் விடுவிப்போம் என்று பதிலளித்துள்ளார்.

அங்கு அமைந்துள்ள இராணுவ முகாமை இடமாற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அது முடிவடைந்ததுமே அந்தக் காணிகள் விடுவிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவரிடம் இராணுவத் தளபதி உறுதியளித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *