Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தமிழர்களின் வேதனைகளுக்கு விரைவில் ஒரு முடிவு வேண்டும்

தமிழர்களின் வேதனைகளுக்கு விரைவில் ஒரு முடிவு வேண்டும்

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் தீர்மானத்தை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்தின் அமுலாக்கத்தின் பலன்களை பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக் கொள்வதனை உறுதி செய்யும் வகையில் அனைத்து தேவையான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச சமூகம் என்பன முன்னெடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் 2015 ஆம் ஆண்டின் 30 கீழ் 1 பிரேரணையை முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படுவதனை வலியுறுத்தும் வகையில் ஐ நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34 கீழ் L 1 பிரேரணையை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 கீழ் L 1 பிரேரணையில் இலங்கை அரசாங்கத்திற்கும் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கும் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் 30 கீழ் 1 பிரேரணையின் வெற்றிகரமான அமுலாக்கம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கொடுத்துள்ள கால வரையறையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த பிரேரணைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய தனது வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் எனவும் பிரேரணைகளின் உள்ளடக்கங்களை அவற்றில் உள்ளவாறே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கமானது காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற்போனோரின் குடும்பங்களின் அங்கலாய்ப்புக, மற்றும் புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் போன்ற விடயங்களில் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் மக்கள் தமது பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டார்கள் எனவே குறித்த விடயங்கள் தொடர்பிலான அவர்களது இடர்களுக்கும் வேதனைகளுக்கும் கூடிய விரைவிலே ஒரு முடிவு காணப்படவேண்டும்.

குறித்த விடயங்களை அடைந்து கொள்வதில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பையும் ஒத்துழைப்புக்களையும் நாம் வரவேற்கிறோம்.

தமிழ் பேசும் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தொடர்ந்தும், இலங்கையில் நிலைமாற்று நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான ஐ.நா.வின் பரிந்துரை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின் செயலாக்கம் தொடர்பில் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவதிலும் கண்காணிப்பதிலும் ஆக்கபூர்வமாக செயற்படும் என்பதனையும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …