முல்லைத்தீவில் பொலிஸாரிற்கு எதிராக மக்கள் போராட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பக்கச்சார்பாகப் பொலிஸார் நடந்து கொண்டனர் எனக் குற்றஞ்சாட்டி ஒட்டுசுட்டான் மக்கள் இன்று வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு முத்துஜயன் கட்டுப்பகுதியில் வலதுகரை பிராதன வீதியில் 18.02.19 அன்று மதுபோதையில் உந்துருளியில் பயணித்த மூவர், மிதிவண்டியில் வீதியில் செல்லமுற்பட்ட தாயார் ஒருவரை மோதித் தள்ளினர்.

படுகாயமடைந்த பெண் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்கா வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முத்துஜயன் கட்டு முதலாம் கண்டத்தினை சேர்ந்த 41 அகவையுடைய சுபாதீஸ்வரன் நந்தினிதேவி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்துத் தொடர்பாக ஒட்டுசுட்டான் பிரதேச வீதிப் போக்குவரத்துப் பொலிஸார், விபத்தினை ஏற்படுத்தியவர்களுக்கு பக்கச்சர்பாக நடந்து கொள்வதுடன், கையூட்டுப் பெற்று எவரையும் கைது செய்யவில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பொலிஸாரின் இந்தச் செயலுக்கு எதிராக முத்துஜயன் கட்டு வலது கரை முதன்மை வீதியை மறித்து, ரயர்களை போட்டு எரித்து, வீதியில் எவரும் பயணிக்க முடியாதவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய அதிகாரிகள், பாதிக்கப்பட்ட தரப்புடன் பேசியுள்ளதுடன், சம்பவம் குறித்து விசாரணைகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தனர். அதனையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.