கேப்பாபுலவு காணிகளுக்கு இரண்டு தினங்களில் தீர்வு
கோப்பாபுலவு காணிகள் தொடர்பில் இரண்டு தினங்களில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகளில் 43 கைதிகளே இன்னும் விடுவிக்கப்படாமலுள்ளனர். இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டிருப்பதால் வழக்கு விசாரணையை முன்னெடுத்த பின்னரே அவர்களை விடுவிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேற்கண்டவாறு கூறினார்.
டொக்டர் சிவமோகன் எம்பியும் நானும் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவ உயரதிகாரிகளைச் சந்தித்து கேப்பாபிலவு காணி விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம் , காணி விடுவிப்பு தொடர்பில் இரு தினங்களில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், யாழ் வலி வடக்கு, இரணைமடு, கேப்பாபுலவு போன்ற பிரதேசங்களில் பொது மக்களின் காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தினரின் பிடியில் இருப்பதாக தெரிவித்தார். இது தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தற்கு பெரும் தடையாக அமைந்துள்ளது என்றும் கூறியிருந்தார்.

