விமலின் பிணை மனு நிராகரிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி விகும் கலு ஆராச்சியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற போது, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விமல் வீரவன்ச கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.
பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 40 வாகனங்களை தவறாக பயன்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் 90 மில்லியன் ரூபா இழப்பு அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தமக்கு பிணை வழங்குமாறு கோரி விமல் வீரவன்ச தாக்கல் செய்த மனு இன்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.