லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் திருப்பம்
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தலையில் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளார் என குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மேற்கொண்ட பரிசோதனைகளில் தலையில் தாக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தெஹிவளை – அத்திட்டிய பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன.
குறித்த கொலைக்கும் இராணுவ புலனாய்வாளர்களுக்கும் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினர் 5 மணிநேர விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் சிறப்பு ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டு மூளையின் ஒருபகுதி வெளியில் கொண்டு வரப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.
லசந்த கொலை தொடர்பான விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்ட பல தகவல்களை இன்றைய தினம் கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்த போதே குற்றப் புலனாய்வு பிரிவினர் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் அவரின் கீழ் செயற்பட்ட குழுவே லசந்த விக்கரமதுங்கவை கொலை செய்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஏனைய ஊடகவியாலாளர்களும் ஜெனரல் கபிலவின் விசேட குழுவினராலேயே துன்புறுத்தப்பட்டதாகவும் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

