திருமலை அபிவிருத்தி கூட்டத்ததில் டெங்குவை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட தீர்மானம்
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசஅதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்களான நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சம்மந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே,திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்×ப் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் கூட்டம் இடம்பெற்றது.
குறித்த அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியாவில் பரவிவரும் டெங்கு நோயும் அதிகரித்துவரும் மரணங்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு அங்கு நடைமுறைப் படுத்தப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இதனடிப்டையில் விரைவாக இன்றிலிருந்தே நுளம்புகளைக் கட்டுப்படுத்த புகை விசுறும் கருவிகளை இயக்க பயிற்றப்பட்டவர்களை நியமிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கழிவுகளை அகற்ற முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் பணிப்பில் 10 வைத்தியர்கள் மற்றும் கழிவகற்றும் பவுசர்களும், தேவையான ஏனையவற்றையும் இன்றிலிருந்து பாவனைக்காக வழங்க நடவடிக்கை எடுக்கும் படியும் உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் மாவட்ட அரசியல் வாதிகள் மற்றும் சகல அரச திணைக்கள முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டு கருத்துக்களை கூறி தீர்வுகள் குறித்து கலந்துரையாடிமை குறிப்பிடத்தக்கது.