நியாயமான பொறுப்புக் கூறல் இன்றி நல்லிணக்கம் சாத்தியமில்லை: நவி. அம்மையார் உறுதி
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயமான பொறுப்புக்கூறல் இல்லாமல் இலங்கையில் நல்லிணக்கமும் மீள் உருவாக்கம் போன்ற இலக்குகளை அடைவது சாத்தியமாகாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், இலங்கையின் நிலவரங்கள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே நவி. பிள்ளை இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாதிக்க்பட்ட மக்களுக்கான நியாயம் கிடைக்கும் வகையிலான பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாக காணமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் சரியான முறையில் ஆவணப்படுத்தப்படுவதில் இருந்து அவர்களின் உறவினர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையில் சரியான முறையில் வெளிப்படைத் தன்மையுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில், யூக்கோஸ்லாவியா மற்றும் ருவாண்டா போன்ற நாடுகளில் இவ்வாறன பிரச்சினைகள் கையாளப்பட்டமையை முண்ணுதாரணமாக கொண்டு இலங்கை பொறுப்புக்கூறல் விடயத்தில் நேர்மையாக செயற்படுவதன் மூலம் மட்டுமே நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியும் எனவும் நவி. அம்மையார் வலியுறுத்தியுள்ளார்.

