சங்கானை நவீன சந்தைக் கட்டடத் தொகுதி அமைக்க நிதி ஒதுக்கீடு
சங்கானை நவீன சந்தைக் கட்டடத் தொகுதி அமைப்பதற்கு 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, மீள்குடியேற்ற அமைச்சு மேற்படி நிதியை வழங்கியுள்ளது.
வலிகாமம் மேற்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கானை கடைத் தொகுதிக்கும், சந்தைக்குமான திட்டங்கள் மக்களால் கடந்த பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்தது. உரிய நிதி ஒதுக்கீடுகள் இல்லாமையினால் திட்டம் தொடர்ச்சியாக ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பிரதேச மக்கள், வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகளின் தொடர் கோரிக்கைக்கு அமைவாக, திட்டத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், நவீன சந்தைக் கட்டிடத் தொகுதிக்கான கோரிக்கையை கடந்த ஆண்டு முன்வைத்திருந்ததுடன், நிதி ஒதுக்கீட்டுக்காக தொடர் அழுத்தங்களையும் பிரயோகித்திருந்தார்.
அதற்கமைய மீள்குடியேற்ற அமைச்சு, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக நவீன சந்தைக் கட்டிடத் தொகுதி நிர்மாணிப்புக்கு 80 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், கட்டடத் தொகுதி அமைப்பதற்குரிய திட்ட வரைவு மற்றும் மதிப்பீட்டினை தயாரித்து தொடர்புடைய திணைக்களங்களின் அனுமதியுடன் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு, பிரதேச சபைச் செயலரை, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் கோரியுள்ளார்.

