முதலமைச்சரின் கோரிக்கை வடமாகாண சபையில் மீண்டும் நிராகரிப்பு
வட மாகாணத்தின் குடிநீர் தேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கான வடமாகாண சபையின் சிறப்பு அமர்வை ஒத்திவைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வடமாகாணத்தின் குடிநீர் மற்றும் நீர்வளங்கல் தொடர்பான வடமாகாண சபையின் 84 ஆவது சிறப்பு அமர்வு இன்றைய தினம் திட்டமிட்டபடி நடைபெற்றுள்ளது.
வட மாகாணத்திற்கான குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பில் ஆய்வுகளை நடத்துவதற்கு, கடந்த மாதம் சிறப்பு அமர்வு ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த அமர்வை ஒத்திவைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்த போதிலும், முதலமைச்சருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன், 7 ஆம் திகதியான இன்றைய தினம் நடத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிறப்பு அமர்வை ஒத்திவைக்குமாறு கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் இன்றைய சிறப்பு அமர்வில் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த மின்னஞ்சலில் சிறப்பு அமர்வை ஒத்திவைக்குமாறு கேட்டுள்ளதுடன், இந்த அமர்வை நடத்துவதன் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் உள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளதாகவும் அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அந்த விடயம் சபை நடவடிக்கை குழுவில் ஆராயப்பட்டதற்கு இணங்க சிறப்பு அமர்வை ஒத்திவைக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டதாக கடந்த 01 ஆம் திகதி முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளதாகவும் அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கூறியுள்ளார்.
இதேபோன்று, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் இந்த அமர்வை ஒத்திவைக்குமாறு கேட்டதுடன், மேலும் சிலர் முதலமைச்சரின் கோரிக்கையை நிராகரிக்குமாறும் கேட்டதற்கு இணங்க திட்டமிட்டபடி சிறப்பு அமர்வு நடைபெற்றுள்ளது.




