இலங்கை அரசு தொடர்பில் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட சகல விடயங்களையும் நாம் ஏற்கவில்லையென, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு ஜெனீவாவில் வலியுறுத்தப்பட்ட போதிலும் எமது நிலைப்பாட்டை அவர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளேன்.
மேலும், இலங்கை அரசமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க முடியாது. அரசமைப்பிற்கு அப்பால் சென்று எந்தவொரு விடயத்தையும் எம்மால் செய்ய முடியாது.
இலங்கையில் யுத்தத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அதனை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.
இருப்பினும் ஏனைய நாடுகள் குறிப்பிடுவது போல அனைத்து விடயங்களையும் மேற்கொள்ள முடியாதென தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
யுத்தம் நிறைவுற்று சாதாரண நிலைமை தோன்றியும் ஒவ்வொரு வருடமும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று பதிலளிக்கும் நிலைமை மாற வேண்டும்” என்றார்.