காணி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பன்னங்கண்டி மக்கள் போராட்டம்
குடியிருப்பு காணிக்கான நிரந்தர அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறும் நிரந்த வீட்டுத்திட்டத்தை வழங்குமாறும் வலியுறுத்தி, கிளிநொச்சி – பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பசுபதிப்பிள்ளை கிராமத்தின் முன்பாக பன்னங்கண்டி கிராம மக்கள் நேற்றுமுன்தினம் முன்னெடுத்த குறித்த போராட்டம், மூன்றாவது நாளாக இன்றும் மேற்கொள்ளப்படுகின்றது.
பன்னங்கண்டி பகுதியில் 3 பிரிவுகளாக வசித்துவரும் மக்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று, மீண்டும் குடியேறி 7 வருடங்கள் கடந்துள்ள போதிலும்,
இதுவரை எந்தவொரு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படாத நிலையில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் காலங்களில் தமது பகுதிக்கு விஜயம் செய்யும் அரசியல்வாதிகள் பின்னர் தமக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு முன்வருவதில்லை என்று மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
இதேவேளை யுத்தம் காரணமாக மாற்றுத்திறனாளிகளாகியுள்ள தாங்கள், தங்குவதற்கு நிரந்தர வீடு மற்றும் காணியின்றி நாளாந்தம் அல்லலுறுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமகன் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.




