காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? வவுனியாவில் பேரணி
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? உண்மையை சொல்’ எனக் குறிப்பிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்று (சனிக்கிழமை) பேரணியொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
இப்பேரணியின் நிறைவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய்மார் தமது உறவுகளை எண்ணி கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்த குறித்த பேரணியானது, புகையிரத நிலைய வீதி, கடை வீதி மற்றும் கொரப்பத்தானை வீதி ஊடாக, உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றுவரும் ஏ-9 வீதியை வந்தடைந்தது.
சுமார் 30 பேர்வரையில் கலந்துகொண்ட குறித்த பேரணியில் ‘எமது பிள்ளைகள் எங்கே’, ‘காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு’, ‘சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்’, ‘எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே’, ‘காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? உண்மையை சொல்’, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு கோஷமெழுப்பியவாறு ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.
குறித்த போரணி நிறைவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம் ஆகியோர் உரையாற்றினர்.




