ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கிடையே முறுகல்நிலை உருவாகியுள்ளதாக உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டம், ஒழுங்கு அமைச்சை எவரிடம் கையளிப்பது என்பது தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்தே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று கடந்தவாரம் இடம்பெற்றது.அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசீம், அகிலவிராஜ் காரியவசம், ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
சந்திப்பில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “”சட்டம், ஒழுங்கு அமைச்சை பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் தற்போது பெரும் பிரச்சினையும் உருவாகியுள்ளது. எனவே, சட்டம், ஒழங்கு அமைச்சை லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு கைமாற்றுவதற்கு உத்தேசித்துள்ளேன். உங்களின் கருத்து என்ன?” என்று வினவியுள்ளார்.
இதற்கு கடும் எதிர்பை வெளியிட்டுள்ள அமைச்சர் மலிக் சமரவிக்கிர, “”கட்சிக்குள் அதிருப்தியாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் இந்த நியமனத்தை ஏற்கமாட்டார்கள். ஆகவே, அனைவரும் ஏற்கும் நபரொருவரை நியமிக்கவேண்டும். ரஞ்சித் மத்துவ பண்டாரவே இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர்” என்று கூறியுள்ளார்.
மலிக்கின் கருத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹாசீமும் ஆதரவு வழங்கியுள்ளார். “”ஆம். ரஞ்சித் மத்தும பண்டார சிறந்த நபர். கட்சியின் மூத்த உறுப்பினர். சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பிருக்கின்றது. எனவே, அவருக்கே வழங்கலாம்” என்று தனது கருத்தை கபீர் ஹாசீம் முன்வைத்தார். இதற்கு ஏனைய அமைச்சர்களும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
இந்த கூட்டத்தால் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கடும் அதிருப்தியில் இருக்கின்றாராம். அமைச்சரவை மாற்றத்தின்போது தன்னிடமிருந்த அமைச்சுகளும் கைமாறப்பட்டுள்ளன. தற்போது கட்சிக்குள் இருக்கும் மூத்த உறுப்பினர்களே என்மீது நம்பிக்கைவைக்க மறுக்கின்றனர் என்று கூறி கவலைப்பட்டாராம் கிரியெல்ல.
கிரியெல்லவுக்கு ஆதரவாக சில மூத்த உறுப்பினர்கள் குரல்கொடுத்துள்ளனர். இதையடுத்தே சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் முறுகல்நிலை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது. எனினும், கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக்கொள்வதற்காக அந்த முரண்பாட்டை அவர்கள் வெளிப்படையாக காட்டிக்கொள்வதில்லை என்று சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.