இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் உணவு தவிர்ப்பு : ஒருவர் வைத்தியசாலையில்
இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர் ஒருவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை எந்தவொரு அதிகாரிகளும் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடாத நிலையில் ஈழதமிழர்கள் நான்காவது நாளாகவும் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்தோனேசியாவில் ஈழ தமிழர்கள் சிலர் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ளனர்.
இவ்வாறு புகலிடம் கோரிய 350 ஈழத்தமிழர்கள் குடும்பங்களாகவும், தனி நபர்களாகவும் இந்தோனேசியாவின் மெடான் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வன்னி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் அவர்களின் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் நாட்டுக்கு திருப்பியனுப்பப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.




