பொய்கூறியே ஆட்சிக்கு வந்தோம் ஒப்புக்கொண்டார் ராஜித சேனாரத்ன
நிறைவேற்றப்பட முடியாத எந்தவொரு பொய் வாக்குறுதியையும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி தாம் வழங்கவில்லை என்று நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் முதலாவது விளம்பரத்தைக்கூட பிரசுரிப்பதற்கு பணம் இருக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, எப்படியாவது ஆட்சியை அமைத்து பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவோம் என்று பொய் கூறியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நிதியுதவி செய்யச்சென்ற வர்த்தகர்களிடம் உதவிகேட்டதாகக் கூறினார்.
அரசியல் பழிவாங்கலுக்கு இலக்காகியவர்களின அமைப்பு ஏற்பாடு செய்திருந்த வருடாந்தக் கூட்டம் கொழும்பு விஹாரமகாதேவி வெளியரங்கு மைதானத்தில் இன்றைய தினம் காலை நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்ட தொழிற்சங்க அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன
“தேர்தலில் வழங்கப்படுகின்ற அத்தனை வாக்குறுதிகளும் தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பொய்யானவைகளாகும். அப்படியான வாக்குறுதிகளை நாங்கள் ஜனவரி 8ஆம் திகதி வழங்கவில்லை. நாங்கள் அலசி ஆராய்ந்து, இந்த நாட்டிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், வெகுசன அமைப்புக்கள், ஜனநாயகத்தை மதிக்கும் பிரிவினரும், சுதந்திரத்தைக் கோரிய ஊடகவியலாளர்கள் ஆகியோருடன் பேச்சு நடத்தியே எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்தோம். எங்களுக்கு உறக்கம் இருக்கவில்லை.
தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் எமது சடலத்தை புதைத்திருப்பார்கள் அல்லது சமாதி கட்டப்பட்டிருக்கும். இதனால் எமக்கு உறக்கமும், பசியும் இருக்கவில்லை. எமக்கு இருந்த ஒரே அடைக்கலம் மக்களாகும். எமக்கு பணமும் இருக்கவில்லை. பணபலம் உடைய முதலாளிகள் தமது பணப் பொதிகளை எடுத்துக் கொண்டு அலரிமாளிகையிலுள்ள மஹிந்த ராஜபக்சவை சந்திப்பதற்குச் சென்றனர்.
பத்திரிகையில் முதலாவது தேர்தல் விளம்பரத்தை செய்வதற்குக்கூட எமக்கு பணம் இருக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேனவிடம் பேசி 60 மில்லியன் ரூபாவை எனது மகன் பெற்றுக்கொண்டுவந்த பின்னரே முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தினோம். நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவோம். அப்போது பணம் கிடைக்கும். அவற்றைக்கொண்டு உங்களது கணக்குகளைத் தீர்ப்போம் என்று பொய்யைக் கூறியே வர்த்தகர்களிடம் உதவிகோரினோம். அவ்வாறே எமது தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினோம்.
அது ஜனாதிபதிக்கும் தெரியும். மஹிந்த ராஜபக்சவுக்கு 50 கோடி ரூபாவைக் கொடுத்த வர்த்தகர்கள் எமக்கு வெறும் 5 இலட்சம் ரூபாவையே கொடுத்தனர். சிலவேளை மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுவிட்டால் என்ற எண்ணத்திலேயே அவர்கள் வழங்க முன்வந்தனர். எனினும் யாரும் எதிர்பாராத கீழிருந்தான சக்தி ஒன்று எமக்கிருந்தது. இந்த நாட்டு மக்களே அந்த சக்தியாகும்” – என்றார்.




