அரசாங்கம் விடுத்த அழைப்பு நிராகரிப்பு; 10ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்
காணிப் பிரச்சினை தொடர்பாக அலரிமாளிகையில் நடைபெறும் கலந்துரையாடலுக்கு வருமாறு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் நிராகரித்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் தமது நிலமீட்பு போராட்டத்தை 10ஆவது நாளாக இன்றும் முன்னெடுத்து வருகின்றனர்.
பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இராப்பகலாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திலும் நேற்றைய தினமும் குரல் எழுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் போனோரது உறவினர்களையும், புதுக்குடியிருப்பு பகுதியில் காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஒருசிலரையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கொழும்பில் சந்திக்கின்றார்.
இந்த சந்திப்பிற்கு வரும்படி பிலவுக்குடியிருப்பு நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் பிரதேச செயலாளர், அரச அதிபர், பாதுகாப்பு பிரிவினர், மக்கள் பிரதிநிதிகள், அரசியலமைப்பு பேரவை போன்ற அனைத்து தரப்பினரையும் தெளிவுபடுத்திய பின்னரும் பிரதமரிடம் எதற்கு தெளிவுபடுத்த வேண்டும் என பிலவுக்குடியிருப்பு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்து இன்றைய தினமும் தங்களது போராட்டத்தை அவர்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.




